Sunday, 25 February 2018

SBI பரிதாபங்கள்

40 நிமிசமா லைன்ல நின்னு 
சார் ATM பின் தொலைந்துபோச்சு அத எப்டிசார் ஆக்டிவேட் பண்றது! மிசின்க்கு போங்க பின் ஜெனரேசன்ல போயி அக்கவுண்ட் நம்பர் அடிங்க, அடுத்து ரிஜெஸ்டர் மொபைல் நம்பர் கொடுங்க தற்காலிகமாக ஒரு நம்பர் வரும் அத யூஸ்பண்ணி வேற நம்பர் மாத்திக்கொங்க!
 சார் நான் வெளிநாட்டிலிருந்து இப்போதான் வந்தேன் என்னுடைய பழைய மொபைல் நம்பர்.. (ஒரு நிமிசம், சார் இந்தம்மா பாஸ்புக்க செக் பண்ணி கிலியர் பண்ணுங்க, அவரோட செலானையும் அக்கவுண்ட் பண்ணி கொடுங்க, சங்கர் சார் அவங்க செர்டிபிகேட்ட அட்டஸ்டேட் பண்ணியாச்சான்னு பாருங்க,) ம்ம்ம்ம சொல்லுங்க சார்..

அதான்சார் ரொம்ப நாள் யூஸ் பண்ணாம மொபைல் நம்பரும் வொர்க் ஆகல சார், இந்த புதிய நம்பர ரிஜெஸ்டர் பண்ணிரீங்களா?

அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க
***** என்னா சார் உங்க அக்கவுண்ட் யூஸ் பண்ணி 8 மாததிற்க்கு மேல் ஆகுது?
ஆமா சார், நான் வெளிநாட்டுல இருக்கிறதால தொடர்ச்சியா பயன்படுத்த முடியல

சார் இப்போலாம் ஸிஸ்டம் மாறிடிச்சி சார் "யூ சுட் யூஸ் யுவர் அக்கவுண்ட் எவெரி 3மன்த்ஸ்

சார் நான் இந்த அக்கவுண்ட கடந்த 11வருசமா யூஸ் பண்றேன் இதுவரை இப்டி ஆனது இல்லையே சார்!

(ஒரு நிமிசம், பார்வதி யார்மா.. இங்க வாங்க தொளசி உங்க பொன்னா? ஆமா சார். அவங்க வயசு என்னா? 42சார்! அம்மா உங்க வயசு இல்ல உங்க பொன்னு வயச சொல்லுங்க? அது 18சார், இனி ஜாயிண்ட் அக்கவுண்ட்லாம் தேவபடாதுமா, அவங்களுக்கு தனியா ஒரு அக்கவுண்ட் ஓபன் பண்ணிகோங்க!! அவங்க ஆதார் கார்ட் எங்கமா
எடுத்து வரலசார், ஏன்மா போனதடவையே சொல்லிருப்பாங்களே! இனி எடுத்து வரலேன்னா பணம் தரமாட்டாங்க சரியா! சேரிசார்.) 

ம்ம் சீக்கிறம் சொல்லுங்கசார். நான் சொல்லிட்டேன் சார்! நீங்க தான் சொல்லனும்

சார் உங்க அக்கவுண்ட் லாக்' இருக்கு, நீங்க பர்ஸ்ட் செல்லான்ல ஒரு 100 ரூபாய் பில் பண்ணி, டோக்கன் வாங்கி கேஷ் கவுண்டர்ல அக்கவுண்ட்ட ஆக்டிவேட் பண்ணுங்க.

(டொக்கன் வாங்கி 40நிமிசம் கழித்து கேஷ் கவுண்டர் போனவுடன்)

சார் உங்க அக்கவுண்ட் ஆக்டவேட் ஆகலயே, எப்டி பணம் தருவது?
அதுக்குதான் மேனேஜர் செல்லான் மூலமா எடுக்க சொன்னாரு

சரி உங்க ஆதார் கார்ட் எங்க!? 
அது வீட்ல இருக்கு சார்
போய் எடுத்து வாங்க சார்.
ஏன் சார் 40 நிமிசம் வைட் பண்ணி வந்தா, இப்போ ஆதார் கார்ட் எங்கேன்னு கேக்குறீங்க! அப்போவே சொல்லி இருந்தா போய் எடுத்து வந்திருப்பேனே!

அதெல்லாம் இங்க பேசாதீங்க! ஆதார் கார்ட இணைக்காம இருந்தது உங்க தப்பு. போயி ஒரிஜினல் எடுத்து வாங்க.

(20நிமிசத்துல ரிட்டன் டூ சேம் கவுண்டர்)
இந்தாங்க சார் ஆதார் ஒரிஜினல்!
சார் இத ஒரு ஜெராக்ஸ் எடுத்து அதுல உங்க அக்கவுண்ட் நம்பர், போன் நம்பர் எழுதி சைன் பண்ணி எடுத்து வாங்க.

இந்தாங்க சார் நீங்க சொன்னமாதிரி எழுதி எடுத்து வந்திறுக்கேன்!

(எல்லாத்தையும் ஒரு பெரிய நோட்புக்ல எழுதி அத ஏன்கிட்டயே கொடுத்து)

சார் 8நம்பர் கவுண்டர்ல போயி அவர்ட்ட கையெழுத்து வாங்கிட்டு வாங்க

ஏன்சார் பின் நம்பர் வாங்க வந்த என்ன  3மணிநேரமா அலக்கடிக்குறீங்க? இந்த வேலைய நான் ஏன்சார் செய்யனும்!?

சார் உங்கள பாத்தா படிச்சாமாதிரி இருக்கு, அதனால்தான் இந்த ரிஜெஸ்டர உங்க கிட்ட தரேன், நீங்களே போனா அவர் உடனே சைன் போட்டு தந்திடுவாரு 10நிமிசத்துல வேலை முடிச்சிடும், போய் வாங்கிட்டு வாங்கசார்.

(அங்க ஒரு பெரிய லைன்) 25நிமிசத்துக்கு பிறகு

சார் இதுல சைன் வாங்க சொன்னாரு கேசியர்

உங்க பேரு
இம்தியாஸ்
வேலிட் ஐடி இருக்கா?
சார் ஆதார் கார்ட் அட்டாச் பண்ணிறுக்கேன் பாருங்க.
அது சரிசார் வேற ஐடி காட்டுங்க?
வேற ஐடி'யா! அப்புறம் எதுக்கு சார் ஆதார் கார்ட் கேக்குறீங்க?
சார் வாக்குவாதம் பண்ண நேரம் இல்ல இருந்தா காட்டுங்க, இல்லனா போயி எடுத்து வாங்க. நீங்க NRE தானே போயி பாஸ்போர்ட் எடுத்து வாங்க.
என்கிட்ட லைசன்ஸ் இருக்கு
சரி அத குடுங்க
இதுவே கலர்ஜெராக்ஸ் மாதிரி இருக்கு
சார் அது ஒரிஜினல், நல்லா பாருங்க.
ம்ம்ம் சரி உங்க பேன் கார்ட் எங்க?
அது வீட்ல இருக்கு
போயி எடுத்து வாங்க
ஏன் சார் காலையில இருந்து உங்ககிட்டதான் விசாரிச்சேன், அப்போலாம் ஒன்னும் சொல்லாம 4மணி நேரம் கழித்து இப்டி அலைய விடுறீங்க?
சார் இது புரோசிஜர், படிச்ச நீங்களே புரிஞ்சிக்க மாட்ரீங்க.
சார் இப்போ அக்கவுண்ட்லேந்து பணம் எடுக்க முடியுமா முடியாதா!?
சார் நாங்களும் லன்ச் டைம்ல வொர்க் பண்ணிட்டுதான் இருக்கோம், நீங்க போயி 3மணிக்கு பேன் கார்ட் எடுத்து வாங்க,உடனே ஆக்டிவேட் பண்ணிடலாம்

3மணக்கு தொடச்சியாக அதே இடத்தில் இருந்து.
யாரோ: சார் இருங்க இப்போ சார் வந்திடுவாரு

வாங்க சார், குடுங்க
பரவால்லையே நீங்களே காபி எடுத்து, மொபைல் நம்பர், அக்கவுண்ட் நம்பர் எழுதி எடுத்து வந்துட்டீங்க. வெரி குட்சார்.

இந்தாங்கசார் கேச் கவுண்டர்ல போயி குடுங்க.

வெற்றிகரமாக 100ருபாய் எடுத்து அக்கவுண்ட் ஆக்டிவேட் ஆனது

சார் அக்கவுண்ட் ஆக்டிவேட் ஆகிடுச்சு, ATM பின் நம்பர்?
சார் இப்போ டைம் இல்ல, நீங்க போயிட்டு நாளைக்கு வாங்க.

*மறுநாள் சற்று முன்பாகவே சென்றேன்*

பல இருக்கைகள் காலியாக இருந்தது, வேலை செய்பவர்கள் இருக்கையும் காலியாகவே இருந்தது, ஒன்னு இரண்டு பேர் வேலை தொடங்கி மும்முரமாக பார்த்துக்கொண்டு இருந்தனர்

சார் இந்த கவுண்டர் உள்ளவர் வரலையா?
சார் மணி9:30 தான் ஆகுது, நீங்க சீக்கிரம் வந்திட்டு அவர கேக்காதீங்க போயிட்டு 1/2 hr கழிச்சு வாங்க.. 
பாலா சார் வாங்க டிபன் வந்திடுச்சு, இதோ வரேன் சார்,
சார் நீங்க போயி வைட் பண்ணுங்க இன்னும் பத்து நிமிசத்தில வந்திடுவாறு.

அவர் சொன்னது போல் 10மணிக்கு வந்தார்.

சார் குட்மார்னிங், ம்ம் குர்மார்னிங்சார் சொல்லுங்க!
எஸ்டர்டே பின் தொலஞ்சு போச்சுண்ணு வந்தேன்ல நியாபகம் இருக்கா சார்.
சார் டெய்லி பல பேர பாக்குறோம், நீங்க அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க.

********** ம்ம் ஆமா நேத்துதானே அக்கவுண்ட் ஆக்டிவேட் பண்ணியாச்சே, இனி என்ன போயி பணம் எடுத்துக்கோங்க
சார் பின் நம்பர் இல்லசார், அதுக்காகதான் வந்தேன்
ஏன் சார் படிச்ச நீங்களே இப்டி வந்தா எப்டிசார், போயி மிஷின் ஜெனரேட் பண்ணிக்கோங்க

சார் மொபைல் நம்பரும் இல்ல சார், எப்டி ஜெனரேட் பண்றது!?

!! இதுவேரயா இருங்க சார், மேடம் மொபைல் நம்பர் ரிஜெஸ்டர் எந்த ப்ளாட்பார்ம் மேடம், சார் 5வது ஃபோல்டர்ல வேர்ட் பைல் இருக்கும் அத ஓபன் பண்ணி பாருங்க சார்.. 
மேடம் சிரமம் பாக்காம வாங்க மேடம், ஓகேஓகே சார் வைட் இதோ வரேன்.

இங்க இருக்கு பாருங்க சார், இதன் படி செய்யனும்.. 
ஓகேஓகே மேடம் தான்க்ஸ், சார் அக்கவுண்ட் புக் தாங்க, 15min later
இப்போ இருக்கிற மொபைல் நம்பர் சொல்லுங்க, 99******** சார் அப்டேட் பண்ணிருக்கேன் இப்போ ஒரு ஓடிபி வரும் அத சொல்லுங்க
3788 சார்.. சரி மொபைல் நம்பர் அப்டேட் ஆகிறுச்சு, நீங்க மிஷின்க்கு போயி பின் ஜெனரேட் பண்ணிகோங்க.

மிக எதிர்பாப்போடு ஏடிம் க்கு போனேன் , மிக நீலமான வரிசை.. வேற வழியின்றி வரிசையில் நின்றேன்,
மாப்ள செம கூட்டமா இருக்குடா, வந்திடவா இல்லனா பஸ்ஸ விட்ருவோம்டா என்று போனில் காலேஜ் பையன் பேசிட்டு இருந்தார்
வரிசை பெண் ஆண் என்று இரண்டாக பிரிச்சு 2செக்கூரிட்டி வழிநடத்தினர்.

ஏம்பா 1200 ரூபா எடுக்கனும், கொஞ்சம் எடுத்து தாங்களேன் என்றது ஒரு அம்மா..
அம்மா தெரியாதவங்க கிட்டலாம் கார்ட் தராதீங்கன்னு எத்தன தடவ சொல்றது, அப்புறம் பணத்த காணும்னு அழுதிட்டு வராதீங்க என்று ஒரு செக்கிரிட்டி மிரட்டினார், அப்புறம் அவரே அந்த அம்மாவை கூப்பிட்டு..
 மூர்த்தி அன்னே இத கொஞ்சம் பார்த்துக்கொங்க, அம்மா இங்கிட்டு வா.. என்று ஏடிம் உள்ளே அழைத்து சென்றார்.. 

யோவ் என்னாயா நீபாட்டு அந்தாம்மா முன்னாடி அலச்சிட்டு போர.. நாங்க லைன்ல நிக்கிறோம்ல, சார் வயசாணவங்க சார் புரிஞ்சுகோங்க
நாங்களும் ஆபீஸ் போகவேணாமா என்று சலித்துக்கொண்டார்
(படித்தவர்களிடம் மனிதம் மரித்தது என்று எனக்கு பின்னாடி ஒருத்தர் முனுமுனுத்தார்) 10:45 வெயில் சுலீர் என்று சுட்டெரிக்க தொடங்கியது, என்றைக்கும் இல்லாம இன்னிக்கு ஏன் சார் இம்முட்டு கூட்டம்னு ஒருத்தர் கேள்வி எழுப்ப, என்ன சார் தேதி பாக்கலயா சம்பள நாள் சார் என்று எங்கேயோ பதில் குரல் ஒலித்தது,

படிபடியாக வருசை நகர்ந்தது உள்ளே சென்றவுடன்தான் தெரிந்தது, ஒரு ஏடிஎம் மிசின்தான் வேலை செய்யுது, இன்னொன்றுஓவுட்ஆப்ஆர்டர் சாரிஎன்று போர்டு வைக்கபட்டுள்ளது

சரியென்று கார்டை செலுத்தி பின் ஜெனரேசன்க்கு தொடங்கினேன், அனைத்தும் முடிக்க நான்கு ஐந்து நிமிடம் ஆனது, வெளியில் இருந்து செக்கியூரிட்டி சார் சீக்கிரம் வாங்க நிறைய பேர் வைட்டிங் என்று குரல் எழுப்பினார்.

ஒரு வழியாக ஒரு குறிப்பிட்ட தொகையை வித்ட்றால் செய்தேன் பேலன் சீட் வந்தது, அதைபார்த்தவுடன் சில சந்தேகங்கள் எழுந்தன, வேறு வழியின்றி மினி ஸ்டேட்மென்ட் எடுத்தேன் அதற்க்குள் வெளியே சத்தம் அதிகமாகின, அத்தோடு வெளிவந்தேன்.. 
என்ன சார் ஏசி ரூம்னு அங்கேயே தங்கிட்டீங்களா என்று ஒருத்தர் சிரித்த முகத்துடன் நக்கலிடத்தார், அவரையும் புண்ணகைத்து கடந்தேன், பின்பு பேன்க் உள்ளே சென்று பொருமையாக ஸ்டேட்மென்டை பார்த்தேன் 7மாசத்திற்க்கு முன்பு வாரம் இருமுறை 825ரூ எடுத்திருக்கிறார்கள், காரணம் என்ன வென்று தெரியவில்லை
சரி பாஸ்புக்கை என்ட்ரி செய்து பார்ப்போம் என்று மீண்டும் அந்த வரிசையில் நின்றேன், பின்னாடி இருந்தவர் என்ன சார் உங்களுக்கும் மிசின்ல பணம் வரலையா இங்க வந்து நிக்கிறீங்கன்னு கேட்டார், அப்புறம் தான் உணர்ந்தேன் இந்த லைன் ஒரு சிலருக்கு பணம் வரலைன்னு கம்பலைன்ட்க்கு நிக்கிறாங்கன்னு.

இல்ல சார் பணம் எடுத்திட்டேன், பாஸ்புக் என்ட்ரி செய்யனும் அதற்காக நிக்கிறேன் என்றேன், சார் அதுக்கு நீங்க வாசல் ஓரமா இரண்டு புள்ளைங்க உக்காந்திருக்காங்கல்ல அவங்க கிட்ட குடுங்க போட்டு தருவாங்க என்றார்,
(எனது இந்த இரண்டு நாள் அனுபவத்தில இவ்ளோ சீக்கிரம் பதில் கிடைத்தது இது மட்டும்தான்)
அங்கு சென்று என்ட்ரி போடவேண்டும் என்று புக்கை குடுத்தேன், புக்கில் 3பக்கம்தான் இருந்தது அதை பார்திட்டு அந்த பொண்ணு சார் கடைசியா 2013 என்ட்ரி போட்டுறுக்கீங்க, இப்போ 2017 சார், நான் சேர்நததே 2015 தான் சார். இவ்ளோ நாள் கழிச்சு இப்போ மட்டும் ஏன் சார் என்ட்ரி என்று சலிப்போடு கேட்டாங்க!

இப்போ தேவ படுது போடுங்க என்றேன்
இல்ல சார், பேஜ் கம்மியா இருக்கு ன்னு சொல்லி முடிக்கிறதுகுள்ள,,
நான் அதிகமா ட்ராஸ்சாக்சன் எதுவும் பண்ணலம்மா, நீங்க தைரியமா மிசின்ல விடுங்க என்றேன்
பக்கத்தில் இருந்த பொண்ணு சார் இப்போலாம் நீங்க மிசின்லயே என்ட்ரி போடலாம், போயி ஏடிஎம் செக்கியூரிட்டி கிட்ட போய் கேலுங்க சொல்லுவாரு ன்னு சொல்லுச்சு
உடனே இந்த பொண்ணு ஏய் ராஜி இது பழைய புக்கு இதுல ஸ்கேன் கோட்லாம் இல்லப்பா! இந்த புக் அந்த மிசின்ல போட முடியாதுன்னு பதில் சொல்லுச்சு!

அப்போதான் இப்டி ஒரு ஸிஸ்டம் இருக்குன்னு தெரிஞ்சு கிட்டேன்!!
ஒருவழியா கடைசிபக்கத்துல வந்து முடிஞ்சிது, இந்தாங்க சார், உங்க கிட்ட புது போட்டோ இருக்கா என்றது?
புரியாமல் ஏன் என்றேன்?! புக் முடிஞ்சிடுச்சு புது புக் போடனும்னா போட்டோ குடுங்க, இல்லனா இந்த புக்ல இருக்கிற போட்டோவ கிழியாம பிச்சு குடுங்க சார் என்றது,
சரிமா என்று நகர்ந்தேன்..
மீண்டும் ஒரு இருக்கையை பிடித்து அமர்ந்து நிதானமாக புக்கை புரட்டினேன்

இதுவரை 5 முறை 825ரூ எடுக்கபட்டு, 2முறை 250ரூ யும்போட பட்டிருக்கு. எந்த ரீசனும் இல்லை
வழக்கம் போல் லைனில் நிக்க தொடங்கினேன், ஆனால் இந்த முரை அங்கு வேலைசெய்யும் இளம் வாலிபர் என்னை கவனித்து கை அசைத்தார், அவரை நோக்கி நடந்தேன், நெருங்கியதும் சிரித்தபடி என்ன சார் உங்கள் அடிக்கடி பார்க்கிறேன் அக்கவுண்ட் ஓபனிங்கா என்றார்! இல்ல சார் என்று முழு கதையையும் சொல்லிமுடித்தேன்,
சிரித்தபடி சார் இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லைசார் இதுக்கு போயி அலுட்டிகுறீங்க என்று கூலா சொன்னார்,
அது என்னமோ உண்மைதான் சார் உங்கள மாதிரி சிரிச்ச முகத்தோடு எத்தன விசயத்தையும் கடந்திடலாம் ஆனா இவங்களையலாம் ரோம்ப கஷ்டம் என்றேன்!
அதற்கும் புண்ணகைத்தார், நீங்க எப்டிசார் ஃபிரியா இருக்கீங்க? உங்க வேலை என்ன என்றேன்? சார் நீங்க வேர நான் ஃப்ரியெல்லாம் இல்லை, நான் தான் இங்க நெட்வர்க் மைன்ட்டனென்ஸ், ஆன்லைன் இஸ்ஸூஸ் எல்லாம் பாக்குறேன், இப்போகூட நிறை அக்கவுண்ட் அப்லோட் ஆகிட்டு இருக்கு என்று கிபோர்ட தட்ட தொடங்கினார்,

சரிசார் புக்க குடுங்க நான் பார்த்து சொல்றேன் என்றார், அழவில்லா மகிழ்ச்சி..
குடுத்தேன் ஒரு 5நிமிடம் பார்திட்டு, நீலி இந்த டிடெக்‌ஷன் என்னான்னு பாரு என்று பக்கத்தில் இருக்கும் பொண்ணு கிட்ட கேட்டார்

ஒரு நிமிசம் சார் , ரிஜெஸ்ட்டர் பில் பண்ணி கேட்டுருக்காரு சாரு அத முடிச்சிட்டு வறேன்னு சொல்லிட்டு, என்னுடைய புக்கை கீபோர்ட் அடியில் வச்சிட்டு போயிடுச்சு
சார் நீங்க கொஞ்சநேரம் வைட் பண்ணுங்க, அந்த மேடம் வந்தோன்ன கூப்பிடுறேன்னு சொன்னார்
நானும் தலையை ஆட்டிட்டு உட்கார இடத்தை தேடினேன், இருக்கும் கூட்டத்தில் நிக்கவே இடம்மில்லை. ஒருவழியா ஒரு இடத்தில் அமர்ந்தேன்..

1/2 மணிநேரம் கழித்து கூப்பிட்டார், சார் இது ரீசன் தெரியல இப்போ எல்லாம் பிஸியா இருக்காங்க நீங்க 1வீக் கழிச்சு வாங்களேன் என்றார், சரி என்று நகர்ந்தேன்
அப்போது 125ரூ டுடெக்சன் என்று மெசேஞ் வந்தது! அதை காமிச்சு இது என்னான்னு கேட்டேன்.. மீண்டும் கம்ப்யூட்டர் பாத்திட்டு டார்மைன்ட் அக்கவுண்ட் ஆக்ட்வேசன் சார்ஜ், எஸ்எம்எஸ் சார்ஜ், ம்ம் அது இது ன்னு பாத்துபாத்து படிச்சார்,
எனக்கும் புரயல அவர்க்கும் உள்ளேர்ந்து அழைப்பு வந்துச்சு கிலம்பிட்டார்.

நானும் கிலம்பினேன்..

நல்ல யோசிச்சு இரண்டு நாள் கழிச்சு சென்றேன்

அதே சிரித்த முகம் சற்று சோகமாக காணப்பட்டது
குட்மார்நிங் என்றேன், சற்று முகம் பாரத்து யோசிச்சு நிதானமாக குட்மார்னிங் என்றார்!

சார் 1வீக் கழிச்சு வாங்க என்றார், இல்ல சார் நான் அதுக்காக வரல, அக்கவுண்ட் குலோஸ் பண்ணனும் என்றேன்!
சட்டென்று பார்த்தார், பிறகு சிரித்தபடி சரியான முடிவாதான் எடுத்துறுக்கீங்க என்று மெதுவாக சொன்னார்!

சரி அதுக்கு இப்போ நான் எங்க போகனும் என்றேன்? மறுபடியும் நீலி சாருக்கு அக்கவுண்ட் குலோசிங் பார்ம் குடுங்க என்றார், அந்த பொண்ணும் எடுத்து குடுத்துச்சு,
எல்லாம்த்துயும் பில் பண்ணிட்டு போனேன்

செக் பண்ணிட்டு, நீங்க மீண்டும் அந்த லைன்ல போயி நில்லுங்கன்னு சிரிச்சபடி சொன்னாரு!!

இந்தமுறை ஒரு புத்துணர்வொடு நின்றேன்,
அதே நபர்(ஆபிசர்), சொல்லகோ சார் என்றார்,
அக்கவுண்ட் குலோஸ் பண்ணனும் என்றேன்
சற்று நக்கலாய் பார்த்தார், (வாட் இஸ் தி வேலிட் ரீசன், யூ ஹாவ்) என்றார்?

என்னால இந்த அக்கவுண்ட் தொடர்ச்சியா பயன்படுத்த முடியாது, எப்படியும் இன்னும் 2மாசத்தில மறுபடியும் டார்மைன்ட் ஆகிடும் என்றேன்!

சார் நீங்க வீம்புக்காகவே பண்றேள், என்றார்!
நான் ஏன்சார் அப்டி செய்யனும், அப்டி செஞ்சா எனக்குத்தான் நஷ்டம் என்றேன்!

இப்போல்லாம் பேன்க் அக்கவுண்ட் மேன்டிட்டரி, “யு நோ ஆர் நாட்
தெரியும் சார் ஆனா, இங்க தான் இருக்கனும்னு இல்லை, எனக்கு வேர ஒரு அக்கவுண்ட் இருக்கு அது ஒன்னு போதும் சார்!

நெவர் சேஞ் திஸ் கைன்ட் ஆப் பியூப்பில் மைன்ட் செட்எம்மா தீபா அந்த குலோசர் பார்ம் கொண்டா.. என்றார்

ஆல்ரெடி வாங்கிட்டேண் என்று நீட்டினேன்..

சி ஜென்டில்மேன் பில்அப் திஸ் ஆல், அன்ட் அட்டாச் யுவர் ஆல் டாக்குமெண்ட்ஸ், மஸ்ட் சம்மிட் யுவர் டெபிட்கார்ட் !

ஓகே என்று அனைத்தையும் பில் செய்து, அட்டாச் செய்து லைனில் நின்றேன், இருந்தும் மனதில் தோன்றியது அக்கவுண்ட்டில் இருக்கும் பணத்தை எடுத்துவிடுவது நல்லது என்று, விருவிருப்பாக ஏடிஎம் லைனுக்கு சென்றேன்

என்னாசார் பேண்க்கும், ஏடிம்மா அழையிரீங்க என்று அறிமுகம் ஆகாத குரல்!

சிரித்தபடி நகர்ந்தேன்.. 2000ரூ மட்டும் வைத்துவிட்டு மற்ற பணத்தை எடுத்தேன்! ஒரு நாளைக்கு இவ்வளவுதான் என்று மெஸேஞ் வந்தது
வேறு வழியின்றி கிடைத்ததை எடுத்துகொண்டேன்!

மீண்டும் வங்கி உள்ளே சென்று லைனில் நின்றேன், இந்தமுறை வழக்கத்துக்கு மாறாக அதிக கூட்டம் மற்றும் சலசலப்பு, ஒன்றோடு ஒன்று இடிபட்டு நின்றனர், நான் சற்று உயரம் என்பதால் எக்கி பார்த்தேன், இருக்கையில் அந்த (இங்கிலீஷ் பேசும் ஆபிசர் இல்லை) அவர் இங்கு அனைவருக்கும் ஆர்டர் போடுபவர் அவரே அங்கு இல்லை, கூட்டம் அதிகமாகிக்கொண்டே போனது!
சார் எங்க போனாரு என்று ஒருத்தர் கணத்த குரலில் கேள்வி எழுப்ப! ஏடிஎம் வேலை செய்யலயாம் சார் அங்கதான் போயிருக்காருன்னு  முன்னாடி இருக்கும் ஒரு அம்மா சோர்வோடு பதில் சொல்லிச்சு!!

அதைகேட்டு ஒன்னு, இரண்டு பேர் கலைந்து சென்றனர்.. இருந்தும் கூட்டம் குறையவில்லை!

மீண்டும் அந்த வாலிபநபர், என்னை பார்த்து கை அசைத்தார்
என்ன சார் இன்றும் முடியலையா என்றார்
ஃபார்ம்லாம் பில் பண்ணுட்டேன் சம்மிட் பண்ணனும் என்றேன்,
இவரு வர லேட் ஆகும், நீங்க அந்த ரூம்ல ஒரு சார் இருப்பாரு அவரு கிட்ட போய் வாங்கிக்கொங்கன்னு, என்கிட்ட சொன்ன மறு நொடி அனைத்து கூட்டமும் அந்த ரூமை நோக்கி நகர்ந்தது.. வேறு வழியின்றி கூட்டத்தில் நசுங்கி வெற்றிகரமாய் கையழெத்தை வாங்கினேன்!
இவர் காரணமே கேட்காமல் கையெழுத்து போட்டார்

கவுண்டர் 7 போயி குடுங்க என்றார், போனால் அங்கு அதே யெங் ஜென்டில்மேன், சற்று வேலையா இருந்தார்
வாங்க சார், உங்க பைல்தான் ரெடி பண்றேன் சொன்னார், கையெழுத்து வாங்கிய பார்மை வாங்கிக்கொண்டார், 5நிமிடம் கழித்து 
நீலி இத செக் பண்ணுமா என்று பக்கத்தில் இருக்கும் பொண்ணுகிட்ட குடுத்தார்.

சார் நான் ரெடி பண்ணிவைக்கிறேன் நீங்க நாளைக்கு மதியமா வாங்க ன்னு சொல்லுச்சு!

சரியென்று நகர்ந்தேன்,.

மறுநாள் முதல் வேலையாய் அக்கவுண்டில் இருக்கும் பணத்தை எடுப்போம் என்று ஏடிஎம் சென்றேன், நினைத்தபடி அக்கவுண்ட் குலோஸ் ஆக வில்லை சந்தோசமாக மிச்சம் இருக்க பணத்தையும் எடுத்தேன்

மதியம் 3மணி அளவில் சென்றேன், கூட்டமே இல்லை, ஆச்சரியமாக இருந்தது, அந்த பொண்ணு என்னை பார்ததும் சிரித்து பைலை எடுத்தது! அருகில் சென்றேன்

என்னசார் காலையில பணத்தையெல்லாம் எடுத்திட்டீங்க போல என்று சிரித்தபடி கேட்டது! ஆமா தேவைபட்டுச்சு அதான் எடுத்தேன் என்று ஒருவழியா சமாளிச்சேன்

தெளிவா 2000மட்டும் வச்சுருக்கீங்க என்று சொல்லி பைலை கொடுத்து, சார்கிட்ட சைன் வாங்கிக்கொங்க என்றது!
மீண்டும் அவரா என்றேன், அதை பார்த்தவுடன் கொஞ்ச சத்தமாகவே சிரிச்சிடுச்சு.. சார் பயபடாதீங்க இந்தமுறை கண்டிப்பா முடிஞ்சிடும் என்றது!

வாங்கோசார், இந்தாங்க இதை கேஷ் கவுண்டர்ல குடுத்து பேலன்ஸ் அமொவுண்ட்ட வாங்கிக்கோங்க என்றார்.. அப்புறம்தான் பார்த்தேன் குலோசிங் சார்ஜ் 876ரூ, அட பாவத்தேன்னு நினைச்சுகிட்டு கேஷ் கவுண்ட்டருக்கு சென்றேன்

எங்க சார் புக் இல்லையா ?

சார் எல்லாத்தையும் சம்மிட் பண்ணிட்டேன், பேலண்ஸ் கேஷ் வேணும் என்றேன்

என்னம்மா நீலி குலோசிங் ப்ராசஸ் எப்படி என்று சத்தமாய் கேட்டார், அந்த பொண்ணுக்கும் தெரியல,. 
பாஸ்கர் சார் பைனல் கேஷ் கிலியரண்ஸ்/ குலோசிங் புரசீஞர் என்னான்னு பக்கத்து கவுண்ட்டர் ஆள் கிட்ட கேட்டார்..

சார், நீங்க இந்த பின்னாடி 3ரூ ஸ்டாம்ப் ஒட்டி கையெழுத்து போட்டு காபி ஒன்னு எடுத்திட்டு வாங்க
அது எங்க சார் கிடைக்கும் ன்னு கேக்கிறதுக்கு முன்னாடியே, எதிர்ல ஒரு புக் சாப் இருக்கும் அங்க போயி அக்கவுண்ட் குலோசிங்குன்னு சொல்லுங்க, அவங்களே செய்து தறுவாங்க என்றார்.

அதன்படி செய்து முடித்தேன், மீண்டும் கேஷ் கவுண்டரில் கொடுத்தேன்..
ஏன் ஸடாம்ப் மேல கையெழுத்து போடாம, கீழ போட்ருக்கீங்க? மேல போடுங்க சார் என்றார், அதன்படி போட்டேன்!

வழக்கம் போல ஒரு புக்க குடுத்து, அதே ஆபிசர்கிட்ட போயி குடுக்க சொன்னார்! எதுவுமே பேசாமல் எடுத்து சென்றேன்..

அவரும் உடனே வாங்கி செக் பண்ணி ஸைன் போட்டார்..
(சார் இவங்கள்ளாம் இங்க 4வருசமா இப்டி தான் அக்கவுண்ட் மெயின்டைன் பண்றாங்க! நீங்க என்னான்ன இதுக்கெல்லாம் குலோஸ் பண்றீங்கன்னு சத்தமா பேசினார்)
சிரித்தபடி புக்கை வாங்கிட்டு கேசியரிடம் குடுத்தேன்.. 

(அப்புறம் என்ன வெற்றிகரமா அக்கவுண்ட் செட்டில்மெண்ட் ஓவர், மீதி பணத்தை வாங்கிட்டு அமைதியா உக்காந்தேன்)

என்னப்பா அந்த சார் எதோ உன்னபத்தி வேகமா பேசினாரே என்னான்னு? பக்கத்தில் இருக்கும் ஒரு வயதான அம்மா கேட்டாங்க.. அவங்க கூட 3பேரு அமைதியா பதில எதிர்நோக்கி பார்த்தாங்க..

ஒன்னும்மில்லம்மா இங்க அக்கவுண்ட் வேணாம்னு எழுதி கொடுத்தேன் அதுக்கு உங்களையெல்லாம் சுட்டிக்காட்டி என்னை நக்கலடிச்சாரு என்றேன்!

(இவனுக திருட்டு பயலுங்க தம்பி, 100வேலை திட்டத்தில நாள் ஒன்றுக்கு 203ரூ கணக்குல வாரம் ஒருமுறை சம்பளம் கையில தருவானுக, அப்போ அதுஇதுன்னு எப்டியும் 200,300 ஆட்டய போட்றுவானுக..
பேன்க்ல அக்கவுண்ட் ஓபன் பண்ணிட்டா எல்லா சம்பளமும் பேன்க்குக்கு வந்திடும், இனி எவனுக்கும் கப்பம்கட்ட வேணாம்னுதான் அம்முட்டுபேரும் இங்க வந்து ஓபன் பண்ணினோம்
இவனுக என்னான்னா இப்போ சொலையா 1500ரூ காச புடிச்சிகிறானுக தம்பி, அது இல்லைனா அடுத்த சம்பளத்தில 400,500 பைன் போடுறானுக.. கணத்திலேந்து தப்பிச்சு கடல்ல விழுந்த கதையா நிக்கிறோம்ன்னு வேதனையோடு சொல்லுச்சு)

இதாவது பரவால்ல இடையில காசு செல்லாதுன்னு தெருவில நிக்கவச்சானுக பாரு, அப்போ சேட்டுகிட்ட வாங்கின கடனுக்கு இன்னும் வட்டி bகட்டுறேன்னு அழுத படி சென்றது இன்னொரும்மா.. 

#பார்த்_மாதா_கி_ஜெ ன்னு நினைச்சிகிட்டு எழுந்து வந்துட்டேன் 

#மக்கள்_வேற_வழியின்றி_வாழ_பழகிக்கிறாங்க

இம்தியாஸ் சவுக்கத்













சொந்தக் காலில் நிற்காத குழந்தைகள்


 ஒவ்வொரு கலவியையும் கர்ப்பத்தில் முடித்து, வதவதவெனப் பிள்ளைகளைப் போடுவது சாதாரண விஷயமாக இருந்த காலம் ஒன்றிருந்தது.  கல்வியும் வேலை வாய்ப்புகளும் பெருகிய காலத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் முழக்கம் வெற்றியடைந்தது. இப்போது நாம் இருவர் நமக்கு ஒருவர் என்றாகிவிட்டது. எண்ணிக்கை குறையக் குறையக் குழந்தைகள் மீதான பெற்றோரின் உரிமையும் அதிகாரமும் பயமும் கட்டுக்கடங்காதவையாகப் போய்விட்டன. 

பிள்ளைகள் நிறைய இருந்தபோது தாம் செய்ய வேண்டிய வேலைகளைத்தாமே செய்து அவை தாமாகவே வளர்ந்தன. தாமே அனுமதிக்கப்பட்டதால் அவற்றுக்குப் பொறுப்புகளும் கடமைகளும் கற்பிக்கப்பட்டன.  ஆனால், இன்று பத்து மாத கர்ப்ப காலத்துக்குப் பின்னரும் வயிற்றில் சுமப்பதைப் போலவே அங்கே இங்கே அசையவிடாமல் இறுக்கிப் பிடிக்கிறோம். தலையை ஒருவரும் கால்களை ஒருவருமாகப் பிடித்து இழுத்து வதைப்பதைத் தான் வளர்ச்சி என நினைத்துக்கொள்கிறோம். இதில் கொடுமை என்னவென்றால், அதுதான் பாசம், பற்று, அன்பு என்றும் நம்புகிறோம்.
எனக்குக் குழந்தை பிறந்திருந்த சமயத்தில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.  கவனித்துக்கொள்ளப் பெரியவர்கள் யாரும் இல்லை. குழந்தை தூங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரமெல்லாம் மாறி மாறித் தூக்கி வைத்துக்கொள்வோம். சில மாதங்கள் கடந்திருந்த போது, இரண்டு நாள்களாக யூரின், மோஷன் போகாமல் குழந்தை அழத்தொடங்கியது. நாங்களும் என்னவெல்லாமோ செய்து பார்த்துவிட்டு மகப்பேறு மற்றும் குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துப் போனோம். அவர் வயதான ஆண். மகப்பேறு மருத்துவராக ஓர் ஆண் இருப்பதைப் பார்த்து எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

பிரச்னையைச் சொன்னபோது,  அவர் முன் இருந்த மர டேபிளில் குழந்தையைக் கிடத்தச் சொன்னார். எதுவும் பேசாமல் குழந்தையைக் கவனியுங்கள் என்றார். ஒரு சில நிமிடங்கள், அங்கே அமைதி நிலவியது. எங்களுக்கு எதுவும் புரியவில்லை. குழந்தை கைகால்களை ஆட்டி ஆட்டி உதைக்கத் தொடங்கியது. சற்று நேரத்தில் சிறுநீரும் மலமும் வெளியேறி `ஈஈஈ’ எனச் சிரித்தது. நான் நம்ப முடியாமல் அவரைப் பார்த்தேன். ’எப்போ பாரு கையிலயே வச்சிருந்தா குழந்தை எப்படி உடலை அசைக்க முடியும். கை காலை நல்லா உதைக்கிறதுதான் அதுக்கான விளையாட்டு, வாக்கிங், ஜாக்கிங் எல்லாம். இப்ப இருக்கற அப்பா அம்மாக்கள் பிள்ளையைக் கீழே இறக்க யோசிக்கிறாங்க. ஃப்ரீயா விடுங்க. கைக் குழந்தைக்கும் தனிமை, சுதந்திரம் எல்லாம் தேவைப்படும். உங்களுக்குக் கொஞ்சணும்னு தோணுறப்போ மட்டும் கையில எடுத்திட்டுக் கீழ விட்டுடுங்க. நீங்க வேணும்னா...குழந்தை அழுது கூப்பிட்டுக்கும்’ என்றார். 

இந்தியப் பெற்றோர், குழந்தை வளர்ப்பில் பிரதானமாக இரண்டே வழிகளைக் கையாள்கின்றனர். ஒன்று அடக்குமுறை,  மற்றொன்று செல்லங்கொடுத்தல். இரண்டுமே ஒரே விளைவைத் தான் ஏற்படுத்துகின்றன. அது சீரழிவு. அதீதச் செல்லங்கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் தம்முடைய உலகத்திற்குள் யாரையும் அனுமதிப்பதில்லை. யாருக்கும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஒரு கட்டத்தில் அவை பெற்றோரையும் புறக்கணிக்கின்றன. 

அன்பு செலுத்துதல் என்பது வேறு, செல்லங்கொடுத்தல் என்பது வேறு என்பதே நமக்குத் தெரியவில்லை. அரவணைப்பு, கட்டியணைத்தல், தொடர்பில் இருத்தல், தன் வேலையைத் தானே செய்ய ஊக்கப்படுத்துதல், உணர்வுகளை மதித்தல் இவையெல்லாம் அன்பு செலுத்துதலில் அடக்கம். இவை கட்டாயம் குழந்தைக்குத் தரப்பட வேண்டும். செல்லங்கொடுத்தல் என்பது குழந்தையால் செய்ய முடிகிற விஷயங்களையும் பெற்றோரே செய்வது, சதா புகழ்வது, கைகாட்டுகிற எல்லாவற்றையும் வாங்கித் தருவது, அடம்பிடித்தலை ஏற்பது, ஒழுக்கமீறலை ரசிப்பது. பெரும்பாலான பெற்றோர் முன்னதையும் பின்னதையும் குழப்பிக்கொள்கின்றனர்.

குழந்தைக்கு உட்காரத் தெரிந்ததும் உணவை ஊட்டிவிடுவதைப் பெற்றோர் நிறுத்திவிட வேண்டும். தட்டில் இருக்கும் சோற்றைச் சிந்திச் சிதறித் தனக்குத் தேவையானதைக் குழந்தையே அள்ளி உண்ணும். ஆனால், பாசக்காரப் பெற்றோர் பள்ளி செல்லும் குழந்தை களுக்கும் ஊட்டியே விடுகின்றனர். நடக்கத் தெரியும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு திரியக் கூடாது. குறிப்பாக அப்பாக்கள், வளர்ந்த பிள்ளைகளையும் கைகளில் தூக்கி வைத்திருப்பதை வீதிகளில், கடைகளில் பார்க்க முடியும். இதன் பெயர் அன்பன்று. குழந்தை தன் வேலையைத் தானே செய்வதைப் பெற்றோர் தடுக்கின்றனர்.

தத்தித் தத்தி நடக்கும்போதே பெருக்குமாற்றை எடுத்து வீட்டைப் பெருக்க எத்தனிப்பதைப் பார்க்க முடியும். பெண் குழந்தை என்றால் இதெல்லாம் இப்பச் செய்ய வேண்டாம் என்கிறோம். ஆண் பிள்ளை என்றால் இதெல்லாம் நீ எப்பவுமே செய்யக் கூடாது என்று தடுக்கிறோம். ஆனால் குழந்தைகள் பால் பேதமில்லாமல் எல்லா வேலைகளையும் செய்ய விருப்பம் காட்டுகின்றன. ஆண் பெண் வித்தியாசமில்லாமல்,  இன்றைய குழந்தைகளுக்கு எந்த வேலையும் செய்யத் தெரியாது என்பதுதான் உண்மை. 

துவைப்பது, வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்வது, சமைப்பது போன்ற

அடிப்படை வேலைகளுக்கு நாம் அவர்களைப் பழக்கவில்லை. வீட்டு வேலைகளைக் கற்பது பெண் குழந்தைகளின் சுமையாக இருந்த அவலம் தற்போது மாறிவருகிறது. 

இன்றைய இளைஞர்கள் பைப் கசிந்தால் சரிசெய்வது, ட்யூப் லைட்டை மாற்றுவது போன்ற சாதாரணப் பணிகளுக்குக்கூட app-ஐத்  திறந்து ஆளைத் தேடுகின்றனர்.  அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் பிளம்பிங், எலக்ட்ரிக்கல் வேலைகளைக்கூட அவர்களுக்கு நாம் கற்பிக்கவில்லை. வீட்டில் செய்வதற்கு எந்த வேலையும் இல்லாததால் அவர்கள் பிற்பகல் வரை உறங்குகின்றனர். நள்ளிரவு கடந்தும் செல்ஃபோனில் மூழ்கிக் கிடக்கின்றனர். இதனால், சோம்பேறித் தலைமுறையாக இன்றைய இளைஞர்கள் தலையெடுத்ததன் காரணம் நமது செல்லங்கொடுத்தல்தான்.  

சில ஆண்டுகளுக்கு முன்னர், என் உறவினர் வீட்டில் சில மாதங்கள் தங்கியிருந்தேன். கல்லூரி படிக்கும் தன் மகனை சார் என்றுதான் என் மாமா அழைப்பார். தபதபவென்று வளர்ந்த அந்த இளைஞன் அவன் அறையில் எப்போதும் தூங்கிக் கொண்டிருப்பான். எழுந்ததும் செல்போனில் ஆராயத் தொடங்கிவிடுவான் அல்லது வெளியே கிளம்பிப் போய்விடுவான். வீட்டிற்கு விருந்தினர் வந்தால்கூடப் பேசுவதில்லை. அப்பா பைக் வேணும்’ என்றால் உடனே கடைக்குக் கூட்டிப் போய்விடுவார். அவனிடம் ஒரு கிரெடிட் கார்டைக் கொடுத்து வைத்திருந்தார். வீட்டில் என்ன வேலை என்றாலும் அம்மாவோ அப்பாவோதான் செய்ய வேண்டும். ஒரு நாள் மிக்ஸி போடும்போது ஹை வோல்டேஜ் ஆகி ஃப்யூஸ் போய்விட்டது. டம்மென்ற சத்தத்தைக் கேட்டுக்கூட அவன் அறையை விட்டு வெளியே வரவில்லை. ஒருமணி நேரம் கழித்து, உள்ளே இருந்து அவனது குரல் மட்டும் வந்தது, அம்மா, ஏ.சி ஓடல’. நாள் முழுவதும் அந்த ஆன்ட்டிதான் மாறி மாறி போன் செய்து ஆள்களைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த இளைஞன் படுத்தே கிடந்தான். அண்மையில் விசாரித்தபோது தெரிந்தது, அவனுக்கு மணமான சில மாதங்களிலேயே விவாகரத்தாகி அம்மா வீட்டில் இருக்கிறானாம்.

செல்லங்கொடுத்து வளர்க்கப்படுகிறவர்களோடு வாழ்வது மிகவும் கடினம். சோம்பேறித்தனமும், தான் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்ற ஆதிக்க உணர்வும் அவர்களிடம் மேலோங்கி இருக்கும். இந்தியக் குடும்பங்களில் ஆண் பிள்ளைகள் செல்லத்தால் சீரழிக்கப்பட்டனர். இப்போது பெண் குழந்தைகளுக்கும் அது பரவிவருகிறது.  நான் முன்பு ஒரு பத்திரிகையில் பணிபுரிந்த போது, கல்லூரி படிக்கும் மகள்களைக் கொண்ட தந்தை ஒருவர் சக ஊழியராக இருந்தார். மூத்த மகளை இன்ஜினீயரிங் சேர்ப்பதற்குப்பட்ட கடனை அவர் அடைத்து முடிக்கும் போது திருமணம் செய்துவைக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. மகள் பேரில் 30 பவுன் நகை சேர்த்து வைத்திருந்தார். ஆனால், அந்தப் பெண், தனக்கு நூறு பவுன் நகை போட வேண்டுமென்று தந்தையிடம் டிமாண்ட் செய்தாள். அதற்காக ஊரில் உள்ள சொத்தை விற்கச் சொல்லி அடம்பிடித்தாள். அதை உன் தங்கைக்காக வைத்திருக்கிறேன்’ என அவர் சொன்ன போது, அவளுக்கு இந்த வீடு இருக்குல்ல’ என்றாளாம். எங்கள பத்தி அவ கொஞ்சம்கூட யோசிக்க மாட்டேங்கிறா’ என்று புலம்பினார். கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்துப் பழக்கப்படுத்தினால், ஒரு கட்டத்தில் பிள்ளைகள் உயிரையும் கேட்பார்கள். கொடுப்பீர்களா?

செல்லங்கொடுக்கும் பெற்றோர் நல்லொழுக்கத்தைவிடக் குழந்தைகளின் திறமைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர்.  சிறுபிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோருடன் பேசுவதற்கே இப்போதெல்லாம் பயமாக இருக்கிறது. இப்பவே பாடுகிறது, ஆடுகிறது, என்னமா வரைகிறது, கம்ப்யூட்டரில் அதற்குத் தெரியாத விஷயமே இல்லை, அமேசான்ல அதுவே ஆர்டர் பண்ணிருச்சு, எனக்கே எல்லாத்தையும் சொல்லித் தருது…’ என வாய் ஓயாமல் புகழத் தொடங்கிவிடுகின்றனர். நாம் எதற்காக அவர்களைப் பார்க்க வந்தோம் என்பதே மறந்துபோகும் அளவிற்குப் பிள்ளை புராணம் பாடுகின்றனர். ஏன் இவ்வளவு பெருமிதம்?

சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தும் இக்காலத்தில் பெற்றோர் தம் பிள்ளைகள் குறித்த வீடியோக்களை ஃபேஸ்புக்கிலும் யூ டியூபிலும் பதிவிட்டுப் புகழ்ச்சிக்குப் பழக்குகின்றனர்.

எல்லாக் குழந்தைகளிடமுமே ஏதேனும் திறமை இருக்கிறது எனும் போது ஏன் நம் குழந்தையை மட்டும் `ஸ்பெஷல்’ எனக் கொண்டாடுகிறோம். அதுவொரு சுயநலன். என் பிள்ளை தான் சிறந்தது என்ற பெருமை இன்று எல்லோருக்குமே தேவைப்படுகிறது. அதனால், நீ திறமைசாலி என்று சொல்வதற்குப் பதில் ‘நீ மட்டும்தான் திறமைசாலி’ என்று சொல்கிறோம். முன்னது அங்கீகாரம். பின்னது அகம்பாவம்.

ஒவ்வொரு குழந்தையும் தனிமனிதராக வளர்ந்தாக வேண்டும். எவ்வளவுதான் பொத்திப் பாதுகாத்து வளர்த்தாலும் ஒரு புள்ளியில்  தன் வாழ்க்கையை, தன் தோல்விகளை, தன் பிரச்னைகளைத் தானே சமாளித்தாக வேண்டும். ஆனால், நமது அதீதப் பாதுகாப்பு வளர்ப்பு முறையால் அவை திக்கற்று நிற்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

செல்லமாக வளரும் பிள்ளைகளால் வாழ்வின் உண்மைகளை ஏற்க முடியாது.  குழந்தைகளைக் கைக்குள்ளிருந்து விடுதலை செய்யுங்கள். அவர்கள் சிரமப்படட்டும். எப்போதும் ஏ.சி போட்டு வைத்திருந்தால் வெயிலுக்கும் குளிருக்கும் எப்படி அவை பழகும்!  வெளியே கூட்டி வாருங்கள். வெறுங்காலில் நடக்கச் சொல்லுங்கள். பொதுப் போக்குவரத்தில் பயணிக்கட்டும். துணிகளை மடிப்பது, புத்தகங்களை அடுக்குவது, ஷெல்ஃபை க்ளீன் செய்வது போன்ற தம் வேலைகளைத் தாமே செய்யட்டும். பொருள்களைக் கேட்டால் `நோ’  சொல்லுங்கள். அன்பைக் கேட்டால் அள்ளித் தாருங்கள்.

குழந்தைகள்மீது பெற்றோர் எடுத்துக்கொள்ளும் உரிமைதான் செல்லங்கொடுத்தல். பிரதிபலனாகத் தான் என்ன சொன்னாலும் கேட்டு நடக்க வேண்டுமென மூளையை கண்டிஷன் செய்யும் சுயநலனே அதில் நிறைந்திருக்கிறது.  தானே உலகம் என்று வாழ்ந்தால் போதும் என நினைக்கின்றனர். ஆனால்,  பெற்றோரின் காலத்திற்குப் பின்னரும் இந்தப் பூமியில் குழந்தை ஒரு தனிமனிதராக, சமூக விலங்காக வாழ்ந்தாக வேண்டும். கைகளிலிருந்து வெளியேறிக் கல்வி கற்கவும், பொருளீட்டவும், தனக்கெனத் துணையை அமைத்துக்கொள்ளவும், போகும் இடங்களில் நல்ல மனிதராக அறியப்படவும் வேண்டும். அந்தச் சமூக வாழ்க்கைக்கு வெகுமுன்னரே தயார்படுத்துங்கள். நிறைய மனிதர்களுடன் பழகி, கலந்து, வாழும் வாழ்க்கைதான் ஆரோக்கியமானது. அப்படியான வாழ்க்கைக்கு நல்லொழுக்கமே ஆதாரம். அதைக் கற்பியுங்கள். உங்களின் கண்டிப்புகளும் இல்லைகளும் அதைத் தன் காலில் நிற்கப் பழக்கட்டும்!


- ஜெயராணி
(ஆனந்த விகடன்)

Friday, 23 February 2018

எலியும் வைரமும்

🐀எலி ஒன்று 💍வைர  வியாபாரி வீட்டிலிருந்து ஒரு 💍வைரத்தை விழுங்கிவிட்டது..

மிகவும் விலை உயர்ந்த *வைரம்* அது. வியாபாரி எலி பிடிப்பவனை👨🏻👨🏻👨🏻‍✈ பார்த்து எப்படியாவது அந்த 🐀எலியை "ஷூட்"🔫 செய்து வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுக்க உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்..

🐀எலி பிடிப்பவனும் தன் *துப்பாக்கி’யுடன்*🔫 வந்துவிட்டான்.. அதை ஷூட் செய்ய..

எலி அங்கே இங்கே என்று 🐀போக்கு காட்டி ஓடியதில் திடீரென்று ஆயிரக்கணக்கான சக எலிகள் ஒன்று கூடிவிட்டன..

ஆயிரக்கணக்கான எலிகளுக்கிடையேயும் அந்த 💍வைரம் முழுங்கிய எலி மட்டும் அந்த எலிக்கூட்டத்தோடு சேராமல் *ஒதுங்கி தனித்தே* நின்றிருந்தது . எலி.👨🏻👨🏻👨🏻‍✈ பிடிப்பவனுக்கு அது வசதியாக போய்விட்டது..

சரியாக குறி பார்த்து அந்த எலியை டுமீல்.. என சுட்டான்..எலி *spot out..*🐁

வைர வியாபாரி சந்தோஷமாக அந்த எலியின் வயிற்றைக் கிழித்து வைரத்தை💍 எடுத்துக்கொண்டான்..

ஆனால் ஒரு கேள்வியை எலி பிடிப்பவனைப் பார்த்து வைர வியாபாரி கேட்டான்..
ஆமா...! அந்த எலி மாத்திரம் மற்ற எலிகளோடு சேராமல் தனியே தனித்தே இருந்ததே! நீயும் அதை சரியாக அடையாளம் கண்டு சுட்டுவிட்டாய்.. என்ன காரணம்? என்றான்.

அந்த எலி பிடிப்பவன் பதில் சொன்னான்...

இப்படித்தான்...

"அனேகர், திடீர் பணக்காரர்கள் ஆனதும் மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர் என்ற என்னம்கொண்டு  மற்றவர்களுடன் தன்னை சேர்க்காமல்,  தூரத்தில் வைத்துக் கொள்வார்கள்" அதுவே.. ஆபத்தில் அவர்களுக்கு உதவாமல் போய்விடுகிறது. என்றான்.

உறவுகளும் அப்படித்தான் சிலர் இடையில் வந்த அழிந்துபோகும் செல்வத்தை நம்பி கடவுள் கொடுத்த உறவுகளை அசட்டை செய்து விட்டுவிடுகிறார்கள்.

ஆயிரம் கோடி செல்வம் இருந்தாளும் சொந்த பந்தமும் நண்பர்களுமே
 கடைசி வரையில் நம்முடன் இருக்கும்....

IPO என்றால் என்ன & இந்தியாவில் IPO-யில் எப்படி முதலீடு செய்வது

IPO வரையறைஒரு நிறுவனம் IPO-ஐ எவ்வாறு வழங்குகிறது? ஒரு நிறுவனம் ஏன் IPO ஐ வழங்குகிறது? நீங்கள் IPO-யில் முதலீடு செய்ய வேண்டுமா? முதலீடு செய்வ...